Wednesday, November 25, 2009

மூட நம்பிக்கையின் சிகரங்கள்!

விலங்கினங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டது ஐந்தறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு ஆறு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் பகுத்தறிவு என்று கூறப்படுகிறது. ஒரு பொருளை பார்த்தால் விலங்கினங்களால் அது என்ன என்பதை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் மனிதனோ அதற்கு சக்தி பெற்றவனாக இருக்கின்றான். உதாரணமாக ஒரு வேப்பமரத்து இலையை கண்களால் காணக்கூடிய மனிதன், அதனுடைய தன்மையை உடனடியாக புரிந்து கொள்கிறான். ஆனால் அதன் அருகில் வந்து முகர்ந்து பார்த்து அல்லது நாவால் சுவைத்து பார்த்து தான் ஒரு ஆடு அதன் தன்மையை புரிந்து கொள்கிறது. இதனால் ஆட்டிற்கு இல்லாத அதிகபட்ச அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனும் முடிவுக்கு மனிதன் வருகிறான். அது தான் பகுத்தறிவு எனப்படுகிறது.

பழைய சோறு குடிக்கும் ஊர்மக்கள்

விலங்குகளை விட மரம் செடி, கொடிகளை விட தனக்கு அதிக பலம் இருக்கிறது எனக் கூறிக்கொள்ளும் மனிதன், தன்னை விட அறிவில், ஆற்றலில் குறைந்த விலங்கினங்களும் மரம், செடி, கொடிகளும் தன்னுடைய தேவையை நிவர்த்தி செய்யுமென்று நம்புகின்றான். அவைகள் மனிதனது பிற்காலத்தை தெரிந்து வைத்திருப்பதாக நம்புகின்றான். குறிப்பிட்ட ஒரு பொருளால் எதுவும் செய்ய இயலாத நிலையில் அது செய்வதாக நம்புவது மூடநம்பிக்கை எனப்படும்.

இந்த மூடநம்பிக்கைக்கு படித்தவன், பாமரன், ஆண், பெண் என் பேதமில்லாமல் பெரும்பாலானோர் அடியையாகி விடுவதை நம்மால் காண முடிகின்றது.

வீடு வீடாக பிச்சை எடுக்கும் மக்கள்

இந்த மூடநம்பிக்கைகள் பல வகைப்பட்டதாக இருந்தாலும் மழை வேண்டி செய்யும் கேலிக் கூத்துகள் தமிழகத்தில் தற்போது மிக அதிகரித்து வருகிறது.

மழையை தருவது இறைவனின் செயல் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட காலங்களில் பருவமழை பொய்த்துவிடும் போது எப்படியாவது மழை வந்து விடாதா என மனிதன் துடிக்கின்றான். அதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி விடுகின்றான். ஒவ்வாரு இடங்களிலும் மழை வேண்டி நடத்தப்பட்ட கூத்துகள் வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றன.

அரசுக்கும் வேம்புக்கும் திருமணம்

மழை வேண்டி சின்னகவுண்டன் பாளையத்தில், வீடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய சோறு மற்றும் கஞ்சிகளை பெரிய அண்டாக்களில் ஊற்றி கரைத்து குடித்துவிட்டு வாத்தியங்கள் முழங்க, ஊரின் முக்கிய வீதிகளில் முறம், சீவக்கட்டையுடன் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் ஒப்பாரி வைத்து 'எங்களது ஊரில் மழை பெய்யவில்லை, ஊரை விட்டு வெளியே செல்வதை தடுக்க, மழை பெய்ய வேண்டும் வருண பகவானே!' என்று கூறியபடி ஊரின் எல்லையில் உள்ள மரத்தில் முறம், சீவக்கட்டை, கூடையை கட்டிவிட்டு திரும்பினார். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் எனறு இவர்கள் நம்புகிறார்கள்.

சிவகாசி அருகே ஆனைக்கூட்டம் என்ற இடத்தில் ஊர்மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று பிச்சை எடுத்தார்களாம். அவ்வாறு செய்தால் மழை வருமென்று இவர்கள் நம்புகின்றனர்.

தவளைக்கு கல்யாணம்

இன்னும் சில இடங்களில் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். இப்படி ஒரு வழிபாடு நடத்துவதற்காகவே வேம்பு மற்றும் அரச மரத்தை அருகருகே வளர்த்து வருகின்றனர். இவ்விரண்டு மரங்களுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை வந்து விடும் என்பது ஒரு சில கிராமத்தார்களின் நம்பிக்கை.

தவளைகளுக்கு திருமணம் செய்வதென்பது வருடந்தோறும் தவறாமல் நடைபெறும் ஒரு கூத்து. இதனால் மழை வரும் என்று நம்புகிறார்கள். ஊர் கூடி, தாரை தப்பட்டை முழங்க வலம் வந்து தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பவர்களுக்கு தம் கைகளில் இருப்பது ஆணும் பெண்ணும் தானா? அல்லது இரண்டும் ஆணா? அல்லது பெண்ணா என்பது கூட தெரியாது என்பது தான் வேடிக்கை.

கழுதைக்கு கல்யாணம்

தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதை போலவே சில இடங்களில் கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் இரண்டு கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தாலும் சில இடங்களில் மனிதனுக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது. ஊரார் முன்னிலையில் தாலி கட்டும் அந்த ஆண்மகனுடன் கழுதையை சீர் செனத்தி கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அந்த கழுதையை மன்னிக்கவும்! மணப்பெண்ணை தன்னுடன் அழைத்து செல்லும் மணமகன், அதனுடன் குடும்பம் நடத்துவாரா என்பது அவருக்கே வெளிச்சம்! இத்தகைய அருவருப்பான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் சில இடங்களில் அனைத்து மதத்தினரும் ஒரே இடத்தில் அமர்ந்து மழைக்காக தங்கள் தங்கள் தெய்வங்களை வழிபட்டு பிரார்த்தனை புரிகின்றனர். இதில் இஸ்லாமியர்களும் அடக்கம்.

மனிதன் கல்வியில் எத்தகைய வளர்ச்சியை கண்டாலும் அவனிடத்தில் இருக்கக்கூடிய மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க முடியவில்லை. மனிதனுக்கு எத்தகைய உதவிகளையும் செய்ய இயலாத குரங்குகள், பாம்புகள் போன்றவற்றை தெய்வமாக வழிபடுகின்றான். ஆனால் அதே பாம்புகளை பிடித்து விற்று பணம் சம்பாதிக்கின்றது இன்னொரு கூட்டம்.

மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் சர்வ மதத்தினர்

ஆந்திர மாநிலம் கரீம் நகரில் உள்ள ஒரு கோவிலில் எமதர்மன் சிலை ஒன்று உள்ளது. தெலுங்கு கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் எமதர்மன் பூமிக்கு இறங்கி வருவதாகவும் அன்றைய நாட்களில் அவரை வழிபட்டால் ஆயுள் நீட்டிப்பு தருவார் என்பதும் மக்களின் (மூட) நம்பிக்கை. இதனால் பல பகுதிகளிலிருந்தும் ஆயுள் விருத்திக்காக பலரும் இங்கு வருகின்றனர். அவ்வாறு மராட்டியத்திலிருந்து ஆயுள் நீட்டிப்பு வழிபாடு நடத்த வந்தவர்கள் மீது லாரி மோதி காரில் இருந்த 8 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவம் அவர்களது நம்பிக்கையின் படி எமதர்மன் பூமிக்கு இறங்கி வரும்போது தான் நடந்துள்ளது. தன்னை வணங்க வந்தவர்களையே எமதர்மன் கொன்றிருக்கிறான். இவ்வாறான சம்பவங்கள் நம் கண்களுக்கு முன்னால் நடந்தும் கூட மூடத்தனத்திலிருந்து விலகமறுப்பவர்களை என்னவென்று சொல்வது?

பாம்புகளை வணங்கும் மக்கள்

மனிதன் அறிவியலில் முன்னேறி சாதனை படைத்துவிட்டான், மிக விரைவில் சந்திரனில் குடியேறிவிடுவான் என கூறிக்கொண்டிருக்கும் நிலையிலும் மூடப்பழக்கங்களை ஒழிக்கமுடியவில்லை.

அறிவை சூனியமாக்கும் மூடநம்பிக்கைகளை மனிதன் கைவிட்டு பகுத்து ஆய்ந்து செயல்படுவானானால் விலங்கினங்களுக்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு புலப்படும். இஸ்லாமியர்கள் இத்தகைய பழக்கங்களில் ஈடுபடுவதில்லை என்பது சற்று நிம்மதி தரும் விஷயமாகும்.

விற்பனைக்காக கடத்தப்பட்ட பாம்புகள்

மழை வேண்டுபவர்கள் இறைத்தூதர் காட்டிய வழியில் மழைத்தொழுகை தொழுதால் இறைவன் நாடினால் மழையை தருவான் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. முஸ்லிம்கள் மழைக்காக அதை மட்டுமே செய்ய வேண்டும்.

ஆக, கழுதை, தவளை, பாம்பு, பல்லிகளை வணங்குவதாலோ கல்யாணம் செய்து வைப்பதாலோ மழை வந்துவிடப் போவதில்லை. தமிழகத்தில் மட்டுமே இத்தகைய பழக்கங்கள் இருக்கின்றன. உலகின் பிற பகுதிகளில் வறட்சி ஏற்படுகின்றன, மழை பெய்கின்றன. ஆனால் அங்கு மூடத்தனங்கள் இல்லை. எனவே பகுத்தறிவு பெற்ற நாம் அறிவார்ந்த செயல்களை செய்வோமே!

நன்றி : உணர்வு

Friday, November 20, 2009

அடையாளங்களை அழித்த அரிதாரம்...!

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாகப் பார்க்கவும்.






Thursday, November 12, 2009

தீவிரவாத இந்து அமைப்பை தடை செய்ய வேண்டும்!

கோவா கிராம பஞ்சாயத்து தீர்மானம்

மார்கோவா, நவ 12-_ சனாதன் சான்ஸ்தா எனும் தீவிரவாத இந்து அமைப்பை தங்கள் கிரா-மத்தில் செயல்பட அனு-மதிக்க கூடாது என்றும் அதனை தடை செய்ய-வேண்டும் என்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பன்டேரா கிராம பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சனாதன் சான்ஸ்தா-வின் ஆசிரமம் அமைந்-துள்ள ராம்நத்தியையும் உள்ளடக்கிய இந்த கிரா-மப் பஞ்சாயத்து, மார்-கோவா குண்டு வெடிப்-பைத் தொடர்ந்து, சனா-தன் சான்ஸ்தாவை தடை செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் சனாதான் சான்ஸ்தாவின் ஆசிரமம் அமைக்கப்பட்டது.


கடந்த அக்டேபர் 16ஆம் தேதி கோவாவின் வணிகத் தலைநகரான மார்கோவாவில் நடை-பெற்ற குண்டு வெடிப்-பில் சனாதன் சான்ஸ்தா உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டனர். காவல்-துறையின் விசாரணை-யில், அந்த இருவரும் வெடிகுண்டை வாகனத்-தில் எடுத்துச் செல்லும்-போது வழியிலேயே குண்டு வெடித்துவிட்ட-தாக அறியப்பட்டது.


இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழ-மையன்று நடைபெற்ற பன்டேரா கிராமப் பஞ்-சாயத்து கூட்டத்தில், சனாதன் சான்ஸ்தாவுக்கு எதிராக கிராம மக்கள் கடும் கோபத்துடன் பேசினர். இதனை அடுத்து சனாதன் சான்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


சனாதன் சான்ஸ்-தாவை தடை செய்வது-டன், ஆசிரமத்தின் நட-வடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்-மானம் நிறைவேற்றப்-பட்டுள்ளதாக பன்டேரா கிராமப் பஞ்சாயத்தின் செயலாளர் திவாகர் சலேகர் கூறியுள்ளார்.

நன்றி : விடுதலை

Monday, November 9, 2009

நடிகைகளுக்கு சேலை கட்டுவோம்!

மகளிர் அமைப்பு எச்சரிக்கை

கடந்த வாரம் சர்வதேச மனித உரிமை அமைப்பின் மகளிர் அணியினர் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சினிமாவில் ஆபாச உடைகளை அணிவதை எதிர்த்தும் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுவதை கண்டித்தும் குரலகள் எழுப்பப்பட்டன.

ஆபாச போஸ்டர்களுக்கு தார் பூசும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

ஒரு பக்கம் குடும்பத்தின் குத்துவிளக்காக சொல்லப்படும் பெண்களெல்லாம் சீரியலில் மூழ்கி அழுது வடிந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்தியாவின் தூண்களான இளைஞர்களோ, நடிகைகளுக்கு கோவில் கட்டுவதையும் அவர்களின் பிறந்தநாளுக்கு ஆரத்தி எடுப்பதையும் வழக்கமாக்கி கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் சற்று வித்தியாசமாகவே இருந்தது.

கால்கடுக்க காத்து நின்று அதுவும் ஒரு மாதிரியான படமென்றால் யாரும் பார்த்து விடக் கூடாதே என மறைந்து மறைந்து படம் பார்த்த காலம் போய் இன்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்னை நீ பார்த்தே ஆக வேண்டும் என மிரட்டுவது போல் வரவேற்பறையில் வந்து விழுகின்றன நடிகைகளின் ஆபாச காட்சிகள். காந்தி ஜெயந்தி முதல் குடியரசு தினம் வரை நடிகைகளின் சிறப்பு பேட்டிகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. துவக்க காலங்களில் சினிமா நடிகைகளை விபச்சாரிகளை போல கருதியதால் பெண்கள் நடிக்க செல்வதை அவமானமாகக் கருதினர். எனவே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பெயிண்ட் அடித்து தாவணி சுற்றி இளமை தோற்றத்தில் நடிக்க வைத்தனர்.

மனித உரிமை கழகத்தின் மகளிர் பிரிவு சென்னையில் நடத்திய ஆபாசத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம்

ஆனால் இன்று சினிமா என்பது குறைந்த நேரத்தில் அதிக லாபத்தை ஈட்டித் தரும் லாபகரமான தொழில் என்பதாலும் நடிகைகளுக்கு பண முதலீடு எதுவும் தேவையில்லை என்பதாலும் இளம் நடிகைகளும் நடிக்க புறப்பட்டு விட்டனர். அதன் காரணமாக போட்டி ஏற்பட்டு, ஆடைகளை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறார்களோ அந்த அளவுக்கு கிராக்கியும் ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டிய தணிக்கை துறையும் அதை கண்டு கொள்ளாததால் சபலிஸ்டுகளுக்கு கொண்டாட்டமாகி போய்விட்டது. தொலைக்காட்சியில் அரைகுறை ஆடையுடன் வரும் இந்த நடிகையை தந்தை, தாய், மகன், மகள் என அனைவரும் ஒன்றாக இருந்து ரசிப்பது தான் இதில் வேதனைக்குரிய விஷயம். தன் மனைவியும் மகளும் ஒழுக்கமாக நடக்க வேண்டும் என எண்ணும் ஒருவன் கூட தான் ரசிக்க, ஒழுக்கக் கேடான பெண்கள் வேண்டுமென்றே விரும்புகிறான். இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் மகளிர் அணியினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் அவசியமான ஒன்றாகும்.

முஸ்லிம்கள் அணியும் ஃபர்தாவை ஆணாதிக்கம் என்றும் ஆடைக்குறைப்பை பெண் சுதந்திரம் என்றும் கூறும் போலி பெண்ணுரிமை வாதிகளுக்கு மத்தியில் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டே ஆகவேண்டும் என்பதே காண்போரின் கூற்றாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மனித உரிமை ஆணையத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா அவர்கள், 'சினிமாவில் ஆபாசமாக நடிப்பது எல்லை மீறிவிட்டது. எப்படியும் ஆடை அணியலாம் என நடிகைகள் நினைத்து மிகவும் கவர்ச்சியாக உடைகள் உடுத்தி நடிக்கின்றனர். இது கலாசார சீரழிவை ஏற்படுத்தும்' என்று கடுமையாக சாடினார். நடிகைகளின் ஆபாசம், தனியார் டிவி சேனல்களில் ஒளிபரப்பப் படுவதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கிறது. இப்போதைய சினிமாக்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம் பெறுகிறது. இதை சென்சார் குழு எப்படி அனுமதிக்கிறது? என்றும் கல்பனா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது வரவேற்க தகுந்த விஷயம். ஏனெனில் தன்னுடைய தேவைக்காக திருடக்கூடிய ஒருவன் எத்தகைய தீங்கையும் செய்ய முற்படுவான். அப்படிப்பட்டவனைக் கூட அவன் அகப்பட்டால் தான் அவனை தண்டிக்க முடியும். ஆனால் தணிக்கை துறையின் செயல் அப்படிப்பட்டதல்ல. ஒரு தீமை மக்களுக்கு செல்வதற்கு முன்பாகவே தடுத்திட முடியும். எனவே இது தணிக்கை துறையின் குற்;றமே! பணத்திற்காக எத்தகைய கீழ்த்தரமான கேரக்டர்களிலும் நடிக்க நடிகைகள் தயங்குவதில்லை. ஆனால் அது மக்களை சென்றடைந்து விடாமல் பாதுகாப்பது அதாவது தடுத்து நிறுத்துவது தணிக்கை துறையின் கடமையாகும்.

'கீழ்த்தரமாக, ஆபாசமாக ஆடை அணிந்தும் விரசக்காட்சிகளிலும் நடிக்கும் நடிகைகளுக்கு வெட்கம், மானம் இருந்தால் (அதுவெல்லாம் அவர்களுக்கு உண்டு என கல்பனா நினைக்கிறார் போலும்!) இனி அவ்வாறு நடிக்கக் கூடாது. ஆபாசமாகவே உடையணியும் நடிகைகளுக்கு சேலை கட்டும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். தொடர்ந்து அப்படியே நடித்தால் ஷூட்டிங் நடக்கும் இடத்தை முற்றுகையிடுவோம்' என்றும் கல்பனா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடக்குமானால் அது தணிக்கை துறைக்குத் தான் அவமானம். அனைத்து மகளிர் அமைப்பினரும் ஒன்றிணைந்து நடிகைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தணிக்கை துறையையும் முற்றுகையிட வேண்டும். மக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடிய எதையும் யாரும் செய்துவிட முடியும் எனில் தணிக்கை துறை என்பது எதற்காக? அனைத்து துறைகளிலும் ஆய்வு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை ஏன் தணிக்கை துறையை ஆய்வு செய்யவில்லை என்ற கேள்விகள் எழுந்து காலங்கள் பலவாயிற்று. அவ்வாறு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு கறுப்பாடுகள் களையப்படும் போதுதான் ஆபாசங்கள் கட்டுக்குள் வரும். சமுதாயமும் சீர் பெறும்.

நன்றி : உணர்வு

Sunday, November 1, 2009

ஹஜ் செய்வோர் கவனிக்க வேண்டியவை!

இந்தியாவிலிருந்து ஹஜ் விமானங்கள் அக்டோபர் 20 முதல் புறப்படுகின்றன. மதீனாவிலும் ஜித்தாவிலும் ஹாஜிகள் வந்திறங்குகின்றனர். ஒரு ஹாஜி சுமார் 40 நாட்கள் இங்கு தங்குகிறார். 8 நாட்கள் மதீனாவிலும் 5 நாட்கள் அரஃபாவிலும் மினாவிலும் மீதி நாட்கள் மக்காவிலும் தங்கி இருப்பார். இந்த புனித பயணமும் தங்கும் நாட்களும் பாதுகாப்புடன் அமைய கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.



1. இந்த வருட ஹஜ், குளிர் கால துவக்கத்தில் துவங்குகின்றது. இத்துவக்கம் சாதாரணமாக ஃபுளூ காய்ச்சல் துவங்கும் நாட்களாகும். இது சவுதி அரேபியாவில் துவங்கி விட்டதென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பன்றிக்காய்ச்சலும் அதிகமாக பரவ வாய்ப்புகள் அதிகம். ஆதலால் ஹாஜிகள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆறு முதல் எட்டு மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பழங்களும் பானங்களும் சூடான சூப் மற்றும் வைட்டமின் சி யைத் தரும் உணவுகளையும் உண்ண வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வரும் பொழுது கைக்குட்டை அல்லது டிஸ்ஸூ பேப்பர் மூலம் வாயையும் மூக்கையும் பொத்தவும். கைக்குட்டையை அடிக்கடி கழுவுதல் நலம். கை கொடுத்தல், கட்டித் தழுவுதல் மற்றும் முத்தம் கொடுத்தலை தவிர்க்கவும். மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களிலிருந்து விலகி இருக்கவும். வெளியே செல்லும் போது முகமூடி(மாஸ்க்) அணியுங்கள். காய்ச்சலோ தொண்டை வலியோ இருந்தால் அறைக்குள்ளேயே இருந்து மருந்து உட்கொள்ளுங்கள். அது நோய் அதிகமாவதையும் அடுத்தவருக்கு பரவுவதையும் தடுக்கும். காய்ச்சல் அதிகமானாலோ மூன்று நாட்களுக்கு பின்னரும் தொடர்ந்தாலோ உதட்டில் நிற வித்தியாசத்தை கண்டாலோ உடனடியாக மருத்துவரை காண்பிப்பது நலம்.

2. மனதளவில் மட்டுமின்றி உடலளவிலும் ஆரோக்கியம் இருப்பவர் ஹஜ் செய்வது நல்லது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நோய்கள் எளிதாக பரவ வாய்ப்புகள் அதிகம். தவாஃப், சயீ கடமைகளை நிறைவேற்றும் போது அதிகமாக நடக்க வேண்டும். ஊரிலிருக்கும் நிறைய ஹாஜிகள் அதிகமாக நடப்பதில்லை. எனவே புறப்படுவதற்கு முன் அதிகமாக நடப்பதை பழக்கமாக்கிக் கொண்டு உடல்ரீதியான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். சவுதி அரேபியாவுக்கு வந்த பிறகு ஏதேனும் நோய் தென்பட்டால் நன்றாக ஓய்வெடுத்து அந்நோய் பூரணமாக குணமான பின்னரே வெளியே இறங்க வேண்டும். வெளியே செல்வதால் நோய் அதிகமாகிவிட்டால் ஹஜ்ஜின் முக்கிய விஷயங்களை செய்யமுடியாமல் 5 நாட்கள் எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுவிடும். உடலில் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே ஹாஜிகள் உம்ராவும் ஹஜ்ஜூம் செய்ய வேண்டும்.

3. பணம், டிக்கெட், மருந்துகள் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கையில் கொண்டு போகும் பேக்கில் வைக்கவும். ஏனென்றால் லக்கேஜூகள் வௌ;வேறு வண்டிகளில் ஏற்றப்படுவதால் நம்முடைய அவசர தேவைக்கு அவை கிடைக்காமல் தாமதம் ஏற்படும்.

4. ஹாஜிகள் எப்பொழுதும் தங்களுடைய முஅல்லிம் நம்பரை நினைவில் வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை வைத்துக்கொள்ள வேண்டும். அடையாள அட்டையின்றி வெளியில் எங்கும் செல்லக் கூடாது.

5. புனித ஹரமில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தொழுவதற்காக தனித்தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. எனவே தம்பதிகள் ஹஜ்ஜூக்கு செல்லும் போது ஹரமில் தொழுதுவிட்டு மீண்டும் சந்திக்க, ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை பார்த்து வைப்பது சிறந்தது. ஹரமிற்கு பல வாசல்களும் அவற்றிற்கு எண்களும் அதில் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவற்றில் ஏதாவதொன்றை அடையாளமாக்கிக் கொள்ளலாம். வழி மாறி சென்றுவிட்டால் ஹரமிற்கு வெளியே முக்கிய இடங்களில் சேவை செய்து கொண்டிருக்கும் இந்தியன் ஹஜ்ஜூ மிஷன் பணியாளர்களிடம் உதவி கோரலாம். இந்தியா என எழுதப்பட்ட ஜாக்கெட்(சட்டை) அணிந்த அவர்கள் உங்களுடைய தங்குமிடத்திற்கு வழி சொல்வர்.

6. இந்த வருடம் ஹாஜிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் புனித இடங்களில் தங்குகின்றனர். இம்மாதம் அதிகமாக குளிரக்கூடிய மாதங்களாகும். குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஜாக்கெட், குளிர் தொப்பி மற்றும் கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டியதுவரும். இரு புனித ஆலயங்களுடைய தரைப்பகுதியில் மார்பிள் பதிக்கப்பட்டுள்ளதால் ஜில்லென்றிருக்கும். எனவே தொழுகை, தவாஃப் மற்றும் உம்ராவிற்கு செல்லும் போது காலில் சாக்ஸ் அணிந்து செல்வது உத்தமம்.

7. ஹாஜிகள் தங்களுடைய பணம் முழுவதையும் தாங்களே வைத்திருக்காமல் தங்களுடைய முஅல்லிம் வசம் கொடுத்து விட்டு தேவைப்படுபவற்றை மட்டும் தேவைப்படும் நேரங்களில் வாங்கிக் கொள்ளலாம். தனியாக செல்லும் நேரங்களில் தெரியாத டாக்ஸிகளில் ஏற வேண்டாம். திருட்டு டாக்ஸிகளில் பயணம் செய்யும் ஹாஜிகளை வெகு தொலைவிற்கு கொண்டு சென்று கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

8. சாலைகளின் போக்குவரத்து முற்றிலும் வித்தியாசமானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது சாலையை கடக்கும் போது இடதுபக்கத்திலிருந்து வாகனங்கள் வருகின்றனவா என்பதை கவனித்து செல்லவேண்டும். இந்தியாவில் நாம் வலதுபக்கத்தை கவனிக்கின்றோம்.

9. இந்தியன் ஹஜ் மிஷன் மக்காவில் கிஸ்லா பார்க்கின் எதிர்புறத்திலிருக்கும் ஜர்வல் கிஸ்லாவில் செயல்பட்டு வருகின்றது. 11 கிளை அலுவலகங்களும் இருக்கின்றன. தங்களின் கிளை எது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தியன் ஹஜ் மிஷன், கிளை அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேசன், மருத்துவமனைகள் போன்ற முக்கிய இடங்களின் தொலைபேசி எண்களை எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டும்.

10. சுத்தமான உணவுகளை மட்டுமே ஹஜ் வேளையில் விற்க வேண்டுமென்ற சவுதி அரசின் கட்டளையின் படி அதை உறுதிசெய்ய அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் திடீர் ஆய்வுகளை நடத்தி வந்தாலும் திறந்தவெளிகளில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யும் கடைகளிலிருந்து உணவுகளை வாங்குவது கூடாது. சவுதியில் தங்கி இருக்கும் நாட்களில் போஷாக்குள்ள பழங்கள், பேக்கிங் செய்யப்பட்ட ரொட்டிகள் ஆகியவற்றை உண்டு ஆரோக்கியம் காக்க வேண்டும். குறிப்பாக மினாவில் தங்கும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

11. முக்கிய ஆவணங்களை கையில் கொண்டு செல்ல வேண்டாம். அவற்றை ஊரிலேயே நம்பத்தகுந்தவரிடம் ஒப்படைத்து விட்டு பயணம் புறப்படுவது நல்லது. ஆவணங்கள் தொலைந்து விட்டால் இந்தியாவில் அவற்றின் நகலை பெறுவது சிரமமாக விஷயமாகும்.

12. மக்காவில் குறிப்பாக மினாவில் ஹாஜிகள் திறந்த வெளியில் துப்புவதோ கழிவுகளை வீசுவதோ கூடாது. குப்பைகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

13. தங்களுக்கு சொந்தமில்லாத எந்த பொருட்களையும் எங்கு கண்டாலும் ஹாஜிகள் எடுப்பது கூடாது. புனித இடங்களில் பல பகுதிகளிலும் சிசிடிவி காமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக போலீஸ் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். பிறரது பொருட்களை எடுத்து பிடிபட்டால் திருட்டுக் குற்றத்தில் சிறை செல்ல வேண்டியது வரும்.

14. ஏதாவது காரணத்தால் தங்களை போலீஸ் பிடித்து பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறியாமல் கையெழுத்து போட வேண்டாம்.

15. கடைகளில் சென்று மொட்டையடிப்பது சிறந்தது. ஏனெனில் ஆங்காங்கே கத்தியும் பிளேடும் கொண்டு சுற்றித்திரியும் நபர்களிடம் மொட்டையடித்தால் சுத்தமில்லாத உபகரணங்களால் தலையில் காயங்கள் ஏற்படுவதோடு நோய் தாக்கும் அபாயம் ஏற்படும்.

16. சாதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் மருந்துகளுடன் கூடிய ஒரு சிறிய முதலுதவிப் பெட்டியை எப்பொழுதும் கையில் வைத்திருப்பது நல்லது.

17. எவருக்கேனும் சுகவீனம் ஏற்படும் பொழுது உறவினர்கள் இல்லையெனில் உடனிருப்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்.

18. சவுதி அரேபியா ஒரு பாலைவன பூமி. ஆனால் அவற்றிலிருந்து வித்தியாசப்படும் அற்புதமான நகரம் மக்கா. லட்சக்கணக்கான மக்கள் சந்திக்கும் அந்த இடத்தில் அனைவருக்கும் இறைவன் தண்ணீரை தருகிறான். அந்த தண்ணீரை வீணாக்காமல் இருக்க வேண்டும்.

19. ஒவ்வொரு தொழுகையின் போதும் மக்கள் கூட்டம் ஹரமை நோக்கி வரும். எனவே வயதானவர்கள் தொழுகை நேரத்துக்கு சற்று முன்னதாகவே வந்து எலிவேட்டர்(சுழலும் மின்சார படிக்கட்டு) மூலமாக பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் எலிவேட்டரின் முன்பாக காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்படும்.

20. ஹாஜிகள் மதீனாவில் 8 நாட்கள் தங்குவர். மதீனாவிலிருந்து மக்காவிற்கு 10 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். வழியில் அடிக்கடி நிறுத்துவதற்கு டிரைவர் தயங்குவது வழக்கம். எனவே வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்காமல் கழிவறைக்கு செல்வது முதல் உணவு பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை முன்பே எடுத்து தயாராக இருக்க வேண்டும்.

21. மினாவில் அனைத்து கூடாரங்களும் ஒரே வடிவத்தில் இருப்பதால் ஹாஜிகள் தங்கள் கூடாரங்களிலிருந்து வழி தவறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. கூடாரத்தை கண்டுபிடிக்க முடியாது போனால் 'லாஸ்ட் பில்கிரிம் சென்டர்' (Lost pilgrim Center) என்ற காணாமல் போன ஹாஜிகளை கவனிக்கும் இடத்திற்கோ அல்லது இந்திய ஹஜ் மிஷன் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும். மினாவில் ஒவ்வொரு பகுதியிலும் கூடாரங்களில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். எனவே ஹாஜிகள் ஒவ்வொருவரும் தங்கள் கூடாரங்களின் எண்ணையும் அந்த பகுதியின் எண்களையும் அறிந்திருப்பது அவசியமாகும். வயது முதிர்ந்தவர்களும் நோயாளிகளும் தனியாக எக்காரணத்தைக் கொண்டும் ஜம்ராவில் கல்லெறிய செல்லக் கூடாது. அதுபோன்று வீல்சேருடனும் கையில் லக்கேஜூகளுடனும் செல்வது கூடாது. மக்கள் கூட்டத்தின் இடையில் அது நமக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதோடு போலீசார் லக்கேஜூகளை பறிமுதல் செய்து விடுவார்கள்.

22. மினா என்பது 30 லட்சம் ஹாஜிகள் 5 நாட்கள் சங்கமிக்கும் ஒரு பள்ளத்தாக்காகும். அதன் ஒவ்வொரு அடி நிலமும் விலைமதிக்க முடியாதவை. அங்கு கூடாரத்தில் தங்குவதற்கும் உறங்குவதற்கும் மிகக் குறைந்த இடமே கிடைக்கும். அதனால் வெளியிலிருந்து யாரேனும் வந்து தங்கினால் உடனடியாக அதை முஅல்லிமிடம் தெரிவிக்க வேண்டும்.

தங்களுடைய ஹஜ் பயணம் எந்தவித சிரமமுன்றி அமைய வேண்டும் என்பதற்காக இந்தியன் எம்பஸியிலிருந்து ஸயீத் அஹமது பாவா (கோன்ஸல் ஜெனரல், ஜித்தா), பி.எஸ்.முபாரக் - கோன்ஸல்(ஹஜ், தகவல் மற்றும் செய்தி (B.S.Mubarak - Consul (Haj, Press & Information) ஆகியோர் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிவித்துள்ளனர். இந்த விபரங்களை துண்டு பிரசுரங்கள் மூலமாக தமிழத்திலிருந்து ஹஜ் செல்வோரிடத்தில் விநியோகம் செய்வது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி : உணர்வு