Monday, May 4, 2009

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 20

பகுத்தறிவுப் பகலவன் என்று போலி பகுத்தறிவுவாதிகளால் போற்றப்படும் பெரியார் அவர்களின் அறிவுரைகளையும், போதனைகளையும் குருட்டு பக்தியை விலக்கி வைத்துவிட்டு கூர்மையாகப் பார்த்தால் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களே அதிக அளவில் உள்ளதைக் காணலாம்.

பெரியார் அவர்கள் மக்களிடம் பிச்சையெடுத்து கோடிக்கணக்கில் நிதி திரட்டினாலும், இல்லாத மக்களுக்கு உதவவேண்டும் என்ற சிந்தனையில்லாதவராக இருந்ததால் மற்றவர்கள் தர்மம் கொடுப்பதும் பெரியாருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

மற்றவர்களுக்குச் சல்லிக் காசைக் கூட கொடுக்காமல் இருப்பது கஞ்சத்தனத்தின் காரணமாக அல்ல என்று நியாயப்படுத்தும் வகையில் பின்வருமாறு பெரியார் எழுதியுள்ளார்.

தர்மம் செய்வது அக்கிரமம்

தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.

அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.

செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.

இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.

ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.

எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.

(21.4.1945 அன்று 'குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய
தலையங்கம்)

தர்மம் செய்யக் கூடாது என்பதற்கு பெரியார் எடுத்துக் காட்டும் எந்த காரணமும் ஏற்கத்தக்கதல்ல!

'செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.'

என்பது பெரியாரின் வாதம் பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பெயராலும் பணக்காரர்களாக ஆனவர்கள் மிகக்குறைவாக இருக்கிறார்கள். தங்களது திறைமையாலும், நேர்மையாலும், கடின உழைப்பாலும், வாரிசு முறையிலும் செல்வத்தைப் பெற்றவர்கள்தான் அதிகமாக உள்ளனர். ஒவ்வொருவரும் தத்தமது ஊர்களில் பணம் படைத்தவர்களை ஆய்வு செய்து இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம்.

சூழ்ச்சி செய்யத் தெரியாத எத்தனையோ வெகுளிகளிடம் செல்வம் சேர்வதை நாம் காண்கிறோம்.

நாம் எதைப் பற்றி எந்த முடிவுக்கு வருவதானாலும் ஒன்று அதற்கு அறிவியல்பூர்வமான காரணம் இருக்க வேண்டும். அல்லது நம் கண் முன்னே தெரியும் உண்மைகளை அடிப்படையாக வைத்து வைத்து அம்முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதற்கு மாற்றமாக எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அது மடமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.

உழைக்காமல் சோம்பியிருப்பவனுக்கும், உழைத்துப் பாடுபடுபவனுக்கும் பொதுச் சொத்து என்ற போலிவாதம் செய்து சமமாகப் பங்கிடுவது எந்த வகையிலும் பகுத்தறிவுக்கு உகந்ததாகாது.

திறமையும், ஆற்றலும், கடின உழைப்பும், சூட்சியும், சூதுவாதும் நிறைந்த ஒருவன் ஒரு கடையை நடத்துகிறான். இவை ஏதும் இல்லாத ஒரு அப்பாவி ஒருவனும் அதேபோன்ற கடையை நடத்துகிறான்.

திறமைசாலியைவிட அப்பாவியின் கடையில் நல்ல முறையில் வியாபாரம் நடந்து அவனது செல்வம் பெருகுவதையும், தியமைசாலி நொடிந்து போவதையும் பரவலாக நாம் காணலாம். இந்த உண்மைகளை எல்லாம் பெரியார் கண்டு கொள்ளவில்லை.

பெரியார் தனது இயக்கத்துக்காக சொத்துக்களைத் திரட்டி கோடி கோடியாக சேர்த்து வைத்துச் சென்றாரே! அந்தச் சொத்தக்களுக்கு மட்டும் பெரியாரின் வாதம் பொருத்தமில்லாமல் போனது ஏன்?

எத்தனையோ பேர் இயக்கம் ஆரம்பித்து அவர்களால் சொத்துக்களைத் திரட்ட முடியவில்லை. ஆனால் பெரியார் மட்டு கொடி கோடியாக திரட்டினாரே இதற்கு காரணம் என்ன? சூழ்ச்சி, பலாத்காரம்தான் காரணமா?

பொதுச் சொத்துக்கள் என்ற வாதத்தின்படி தி. க. வின் சொத்துக்கள் அனைத்தையும் எல்லா மக்களுக்கும் பிரித்துக் கொடுக்காவிட்டாலும் பெரியாரின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமாவது பிரித்துக் கொடுக்க போலி பகுத்தறிவுவாதிகள் முன் வருவார்களா?

பெரியாரின் சீடர்களில் பலர் படித்து கை நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான அவரது சீடர்கள் அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் திண்டாடுகிறார்களே! தனது இயக்கத்தில் கை நிறைய சம்பாதிப்பவர்களின் வருமானம் அனைத்தையும் திரட்டி அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப் போலி பகுத்தறிவுவாளர்கள் தயாரா?

இன்றைக்கும் போலி பகுத்தறிவுவாளர்களில் பலர் பல கோடிகளுக்கு அதிபர்களாக உள்ளனர்.

இவர்கள் பெரியாரைப் பகுத்தறிவுப் பகலவன் என்று உண்மையாக நம்பினால் தங்களது சொத்துக்கள் அனைத்தும் பொதுச் சொத்து என அறிவிப்பார்களா? தங்கள் பெயரில் சொத்து வைத்துள்ள பெரியாரின் சீடர்கள் இதை முதலில் நடைமுறைப்படுத்திக் காட்டத் தயாரா? அவர்களில் ஒரே ஒருவர் கூட இவ்வாறு செய்யமாட்டார் எனும்போது பெரியார் கூறியது தவறு என்பது புலப்படவில்லையா?

பெரியார் கஷ்டப்பட்டு உருவாக்கிய பகுத்தறிவு மிக்க சீடர்களுக்கே பெரியாரின் கூற்று அறிவுக்குப் பொருந்தாது என்று தெரியும்போது பகுத்தறிவுப் பகலவன் என்று அழைப்பது எப்படி? இதை உண்மை எனும் பொய் ஏடு விளக்குமா?

அடுத்து ரஷ்யாவில் லெனின் என்பவர் ஒரு உத்தரவு மூலம் ஏழை பணக்காரன் என்பதை ஒழித்தார் என்று கூறி பெரியார் தனது கருத்துக்கு வலிமை சேர்க்க எண்ணுகிறார். பெரியாரன் இந்த கூற்றும் தவறானதாகும்.

ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை இரும்பத்திரை போட்டு மறைத்துவிட்டு அனைவரும் சமமாக உள்ளனர் என்று சீன் காட்டியதை உண்மை என்று நம்பி பெரியார் இவ்வாறு கூறுகிறார்.

பேச்சுரிமை, எழுத்துரிமை அனைத்தையும் பறித்துவிட்டு நாட்டில் உள்ள அவலங்களை உலகின் கண்களில் இருந்து மறைத்துவிட்டு சோவியத் ஆடிய நாடகத்தை நிஜம் என்று நம்பும் அளவுக்குத்தான் பெரியாரின் சிந்தனை இருந்தது. சோவியத் சின்னாபின்னமாகி இரும்புத்திரை கிழிக்கப்பட்டு அந்த நாட்டின் அவலங்கள் அம்பலத்துக்கு வந்ததை பெரியார் காணவில்லை. அவர் கண்டிருந்தால் தனது இந்த நற்சான்றுக்காக வேதனைப் பட்டிருப்பார்.

சோவியத்தில் நடந்தது என்ன?

பணக்காரர்கள் மற்றும் நடுத்தர மக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அனைவரும் சமம் என்று உதட்டளவில் கூறினார்கள். உண்மையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் பணக்காரர்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டு மற்றவர்களைவிட கூடுதலாக அனுபவித்தார்கள்.

லெனினுக்குக் கிடைத்த வசதிகள் சராசரி குடிமகனுக்குக் கிடைக்கவில்லை. பொலிட் பீரோக்களுக்குக் கிடைத்த வீடு வாசல்கள் மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை.இதனால்தான் சோவியத் சிதறியபோது லெனின் விலையை மக்களே சுக்கு நூறாக உடைத்தப் போட்டனர்.பெரியார் சொன்னது போல் நடந்திருந்தால் இப்படி நடந்திருக்கவே முடியாது.

முதலாளிகள் அனுபவித்து வந்தவற்றை லெனினும், அவரது கட்சியின் உயர்மட்டக் குழுவினரும், பொலிட் பீரோக்களும், அக்கட்சியின் நிர்வாகிகளும் அனுபவித்தார்கள் என்பதுதான் உண்மை.

லெனினுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் இருந்தது போன்ற கார்களும், அரண்மனைகளும் அனைத்து குடிமக்களக்கம் இருந்ததா? நிச்சயமாக இல்லை.

இன்னொரு வகையான ஏற்றத் தாழ்வைத்தான் லெனின் உருவாக்கினார்.

ஒரு வாதத்திற்காக பெரியார் கூறுவது போல், லெனின் செய்து காட்டிய நடைமுறைதான் சரி என்று வைத்தக் கொள்வோம். அப்படியிருந்தாலும் ஒரு பகுத்தறிவாதி என்ன செய்ய வேண்டும்? அந்த நிலை ஏற்படும்வரை ஏழைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதானே சிந்திக்க வேண்டம்?

ஒரு கிராமத்தில் ஒருவனுக்கு கடுமையான நோய் ஏற்பட்டுவிட்து. அதற்குரிய முழுமையான சிகிச்சை சென்னையில்தான் கிடைக்கும். ஆனால் உள்ளூரில் மேலோட்டமான மருத்துவம் செய்யும் மருத்துவர் மட்டுமே இருக்கிறார். சென்னைக்குக் கொண்டு செல்வதற்கு அந்த நோயாளியின் குடும்பத்தில் வசதியில்லை. அல்லது சென்னை செல்லும் வரை உயிர் தங்காது என்ற நிலை உள்ளது.

இந்த நொயாளியின் உறவினர்கள் உள்ளூர் மருத்தவரிடம் அவருக்கத் தெரிந்த சிகிச்சையை செய்ய முயல்கிறார்கள். நோயை பூரணமாக குணமாக்க முடியாவிட்டாலும் வேதனையை அவரால் குறைக்க முடியும் என்பதால் அந்த மருத்துவரை நாடுகிறார்கள்.

இவரது நொய்க்கு சென்னையில்தான் வைத்தியம் உள்ளது. உள்ளூர் டாக்டரிடம் காட்டாதே என்று ஒருவன் அடம்பிடிக்கிறான் என்றால் இவனை என்னவென்போம்?

பெரியார் ஆசைப்பட்டது போன்ற லெனினிஸம் இங்கே இல்லை. அது வரும்வரை ஏழைகள் பட்டினியால் துடிக்கிறார்கள். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுப்பதன் மூலம்தான் இப்பொதைக்கு வறுமையைத் தடுக்க முடியும் என்று சிந்திப்பது பகுத்தறிவா? லெனினிசம் வரும்வரை ஏழைகளக்கு ஒருவனும் எதுவும் கொடுக்கக் கூடாது: செத்து தொலையட்டும் என்பது பகுத்தறிவா?

அறிவுக்கும், நடைமுறைக்கம் ஒவ்வாத நாச்சுக் கருத்தை விதைத்தவரை பகுத்தறிவுப் பகலவன் என்பது எப்படி என்று போலி பகுத்தறிவாளர்கள் விளக்குவார்களா? பெரியார் பக்தியை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு சிந்தித்துப் பாருங்கள்!

எனவே பெரியாரின் இந்த கூற்றில் பகுத்தறிவும் இல்லை: பொறுப்பணர்வும் இல்லை: சமூக அக்கறையும் இல்லை. அறிவக்குப் பொருந்தாத வரட்டு வாதமே இது என்பதில் ஐயமில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்...

No comments: