Sunday, October 4, 2009

சீனாவில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சி!

உலகெங்கிலும் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. இதை தடுக்க அல்லது கட்டுக்குள் கொண்டு வர மேற்குலக ஆட்சியாளர்களும் ஊடகங்களும் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூற, அது உண்மையாகிவிடும் எனும் கோயபல்ஸ் தத்துவத்தை போன்று இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதாக அவதூறு பிரச்சாரங்களை செய்தும் வருகின்றது. அதையும் மீறி இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் கொள்கையாக ஏற்பவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கவும் அவை தயங்குவதில்லை. இந்த பாணியில் மேற்குலகம் செயல்பட, சீனா இன்னும் ஒரு படி மேலே போய்விட்டது. சீனாவில் இஸ்லாம் வெகு வேகமாக பரவி வருகின்ற காரணத்தால் இதை ஜீரணிக்க இயலாத சீன அரசு முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்து விட்டுள்ளது.

சிங்கியாங்கின் தலைநகரான உரும்கியில் முஸ்லிம்கள் 90 சதவீதம் வசித்து வந்தனர். ஆனால் சீன அரசு திட்டமிட்டு அங்கு ஹன்சீனர்களை குடியமர்த்தியது. அங்கு நான்கில் மூன்று பங்கு சீனர்களை அவ்வாறு குடியமர்த்தி ஹன்சீனர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இனக்கலவரத்தை ஏற்படுத்தியது. கலவரத்திலும் கலவரத்திற்கு பின்னரும் முஸ்லிம்களே பாதிக்கப்பட்டனர். பாதிப்படைந்த முஸ்லிம்கள் ஜனநாயக முறையில் போராடினாலும்; அரசால் அடக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலில் தொழுகை நடத்தவும் தடை செய்யப்பட்டனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மாகணங்களில் அரசு வலுக்கட்டாயமாக சீனர்களை திணித்ததால் 41 சதவிகித ஹன்சீனர்கள் அவ்விடங்களில் குடியேற்றப்பட்டு முஸ்லிம்கள் சிறுபான்மையினராக்கப்பட்டனர். இவ்வாறு சீனா, முஸ்லிம்களிடத்தில் கடும் போக்கை கடைபிடித்து வந்தது. அதன் காரணமாக அன்றாட அலுவலுக்கு தடை ஏற்படுமளவிற்கு அங்கு புரட்சி ஏற்பட்டுள்ளது. அதை அடக்கும் எண்ணத்துடன் இஸ்லாமியர்களுக்குள் கடும் கட்டுப்பாட்டை சீன அரசு விதைத்தாலும் அது கட்டுக்கடங்காமல் போவது ஒருபுறமிருக்க, மறுபுறமோ சீனர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்ற வண்ணமிருக்கின்றனர்.

சீனாவில் மட்டுமின்றி சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா வருபவர்களும் வேலை நிமித்தம் வருவபர்களும் இஸ்லாத்தை படித்தவுடன் அதில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சீனர்களின் இந்த இஸ்லாமிய வரவு சவுதி அரேபியாவில் மிகவும் அதிகரித்துள்ளதாக சவுதி அரேபிய பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. மினா, அரஃபா, முஸ்தலிஃபா வுக்கிடையேயான ரயில்வே திட்டத்தை ஏற்று செயல்படுத்திவரும் சீனக்கம்பெனியின் மேலாளர் உட்பட 17 பேர் கடந்த வாரம் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்பு இதே குழுவை சார்ந்த 660 சீனர்கள் இஸ்லாத்தை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனப்பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், அங்கு இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டதாலும் சீன அரசு முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதாலும் சவுதி அரேபியாவுக்கு வரும் சீனர்கள் இஸ்லாத்தின் யதார்த்த நிலையை புரிந்தவுடன் அதை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு சீனாவை விட்டு வெளிவரும் சீனர்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்தை ஏற்பது சீன அரசுக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா இஸ்லாமிய மயமாகி வருகின்றது என போப் ஆண்டவர் ஒருபுறம் கவலையோடு கூற, இன்னொரு புறம் ஆசிய நாடுகளும் இஸ்லாமிய மயமாவது சீனா போன்ற ஆதிக்க ஆட்சியாளர்களை பொறுத்தவரை ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மை.

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை இது உண்மைப்படுத்துகிறது.

நன்றி : உணர்வு

No comments: