Friday, September 25, 2009

கர்கரேயின் கனவு நிறைவேறுமா?

அவிழ்க்க முடியாத அல்லது அவிழ்க்கப்படக் கூடாது என்று சில இந்துத்துவ வெறியர்களால் மறைத்து வைக்கப்பட்ட முடிச்சுகளை அவிழ்த்து, காலங்காலமாய் முஸ்லிம்களின் மீது பழி போட்டு வந்த அவதூறு பிரச்சாரங்களை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஹேமந்த் கர்கரே எனும் மாவீரன்.

இந்திய பாதுகாப்பு பற்றி அதிகமாக சிந்தித்த அவர் விஸிட்டிங் மற்றும் பிஸினஸ் விசாக்களில் இந்தியாவிற்கு வந்து தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கூட விட்டு வைக்காமல் கண்காணித்து தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார். அத்துடன் அபினவ் பாரத் போன்ற சிறு சிறு மத அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன எனவும் கண்காணிக்க ஆரம்பித்தார். அவ்வாறு கண்காணித்த போது தான் மாலேகான் குண்டு வெடிப்பு பற்றிய உண்மைகள் வெளிவரத் துவங்கின. மாலேகானில் அப்பாவி மக்களை கொன்று அந்த பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி பெரும் கலவரங்களை நடத்த பிரக்யா சிங் என்ற சன்னியாசி பெண் உட்பட பலர் திட்டமிட்டது தெரிய வந்தது. இதை கர்கரே உறுதி செய்து வெளியிட்டதும் மூன்று நாட்களில் தான் குண்டு வைத்து கொல்லப்பட இருப்பதாக டெலிபோண் மிரட்டல்கள் வந்தன. பூனாவிலுள்ள பொது தொலைபேசி மையத்திலிருந்து தான் அந்த போண் வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தவர்களுக்கும் ஐ.எஸ்.ஐக்கும் உள்ள தொடர்பை அவர் வெளிப்படுத்தினார். வெடிகுண்டு வைக்க மூளையாக செயல்பட்ட லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்தும் அதை ஒத்துக் கொண்டான். அதன்பிறகு கர்கரே அதிகமான மிரட்டலுக்கு ஆளானார். அனைவரும் பயந்தபடியே மும்பை தாக்குதலில் கர்கரே எனும் மாவீரன் குறிவைத்து கொல்லப்பட்டார்.


அவர் இறந்த பிறகு அதை வைத்து அரசியல் லாபம் ஈட்ட அரசியல்கட்சிகள் போட்டி போட்டு கர்கரேயின் மனைவி கவிதாவை வேட்பாளராக்க காங்கிரஸூம் பி.ஜே.பியும் திட்டமிட்டன. ஆனால் அவரோ வளைந்து கொடுக்கவில்லை. நரேந்திர மோடி கொடுத்த ஒரு கோடி ரூபாயை மோடியின் முகத்தில் வீசி எறிந்தார் கவிதா. இந்தியாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி அப்பாவிகளை கொன்று அமைதியை குலைக்கும் தீவிரவாதிகள் அடக்கப்பட வேண்டும். என் கணவர் அடையாளம் காட்டிய குற்றவாளிகள் தண்டனை பெறவேண்டும். அதுதான் எனக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தேவை என்றார். ஆனால் அடையாளம் காட்டப்பட்ட தீவிரவாதிகள் தண்டிக்கப்படாமல் தப்பிவிடுவார்களோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு மட்டுமின்றி அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜாட்டா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளை நடத்தியது முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோஷி என்று மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மூன்று குண்டு வெடிப்புகளையும் ஒரே குழுதான் நடத்தியதென்றும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் ஏ.டி.எஸ் தெரிவித்தது. மத்திய பிரதேசில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகனாக இருந்த சுனில் ஜோசி இருவர் கொல்லப்பட காரணமாக இருந்த அஜ்மீர் தர்காவில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்கு பின்; மத்திய பிரதேஷ் தேவாசில் வைத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

2006 ல் பெருநாளன்று ஒளரங்காபாத் மஸ்ஜிதில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளை பரிசோதனை செய்து கொண்டிருந்த போது அவை வெடித்ததால் பஜ்ரங்தள்ளை சார்ந்த இரண்டு பேர் இறந்தனர். 2006 ஏப்ரல் 6ம் தேதி பஜ்ரங்தள் அமைப்பை சார்ந்த லஷ்மண் ராஜ் என்பவனின் வீட்டில் தான் இது நிகழ்ந்தது.

மராத்துவாடாவிலுள்ள ஜல்னா,பர்பணி போன்ற இடங்களில் 2003 மற்றும் 2004 ல் நடந்த குண்டுவெடிப்புகளையும் மாலேகான் தீவிரவாதிகள் தான் நடத்தியுள்ளனர் என்றும் ஏ.டி.எஸ் கண்டறிந்தது.

இவ்வாறு இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டு வெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் அமைப்புகள் தான் செய்தன என்ற அடுக்கடுக்கான ஆதாரங்களை ஏ.டி.எஸ் சமர்ப்பித்திருந்தது. ஆனால் ஹேமந்த் கர்கரேயின் மறைவுக்கு பின் அந்த வழக்கின் தீவிரம் குறைய தொடங்கியது. ஜாமீன் பெற முடியாத பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த சன்னியாசி பிரக்யா சிங், லெப்டினென்ட் கர்னல் புரோகித் உட்பட குற்றவாளிகள் பலரை விடுவிக்கும் நோக்கில் அந்த வழக்கு சாதாரண வழக்காக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக சன்னியாசி பிரக்யா சிங் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாள். கோவை குண்டுவெடிப்பின் காரணமாக எவ்வித ஆதாரமுமின்றி நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் விசாரணை கூட இன்றி பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தனர். ஆனால் உறுதியான ஆதாரங்கள் இருந்த போதும் பயங்கரவாதிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இது தொடருமானால் இந்தியாவில் பயங்கரவாதம் பெருகி நாடு சிதறுண்டு போகும். எனவே கர்கரேயின் கனவு நிறைவேறினால் தான் அவர் போன்ற வீரர்கள் பெருகி இந்தியாவை தலைநிமிர செய்வர். இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தாமல் தலைநிமிரச் செய்வது ஆட்சியாளர்களின் கையில் தான் இருக்கின்றது.

கடமை தவறாத கர்கரே!

ஜெனீவாவில் 'ரா' அதிகாரியாக ஏழு வருடம் பணியாற்றிவிட்டு சொந்த பூமியான மஹாராஷ்டிராவுக்கு வந்த கர்கரே, கடந்த வருடம் ஜனவரியில் தான் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1982 ல் ஐ.பி.எஸ் பெற்ற நாக்பூர்வாசியான இவர், குற்ற தடுப்பு பிரிவிலும் போதை பொருள் தடுப்பு பிரிவிலும் பணியாற்றியவர். டாக்டர்.கே.பி. ரகுவம்சி ஏ.டி.ஜி.பி ஆக பதவி உயர்வு பெற்று ரெயில்வே பாதுகாப்பு படைக்கு சென்றதால் கர்கரே ஏ.டி.எஸ்ஸின் (தீவிரவாத தடுப்பு பிரிவு) தலைவராக பொறுப்பேற்றார். அன்று முதல் அவர் கண்காணிக்கபட்ட ஒருவராக மாறினார். தனக்கு கீழுள்ள அதிகாரிகளுடன் நடந்த முதல் ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை பற்றிய தகவல் தான் அவருக்கு தரப்பட்டது. அப்போது 2006ல் நடந்த நாந்தேடு குண்டு வெடிப்பை சுட்டிக்காட்டி, பிற மதத்தவர்களும் வெடிகுண்டு தயாரிக்கிறார்களே என்று கூறினார் கர்கரே. அதுபற்றிய தகவல்களை அதிகாரிகள் தராததால் அவர்களை கண்டித்ததாகவும் செய்திகள் வெளியானது.

நன்றி : உணர்வு

No comments: